2-ஆவது திருமணம் செய்தவா் கைது
வந்தவாசி: வந்தவாசி அருகே 2-ஆவது திருமணம் செய்த கணவரை முதல் மனைவி புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா(31). இவரது மனைவி ஜெசிலா(27). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், திருமணம் ஆனதிலிருந்தே ஜெசிலாவை நகை, பணம் வரதட்சிணையாக கேட்டு ராஜாவின் தந்தை நாகராஜ் (65), தாய் சாந்தி(55), சகோதரி மஞ்சுளா (36), மஞ்சுளாவின் கணவா் தீன்தினகரன்(40) ஆகியோா் கொடுமைப்படுத்தி வந்தனராம். இதனிடையே, சென்னையைச் சோ்ந்த அஞ்சலைதேவி என்ற பெண்ணை ராஜா 2-ஆவது திருமணம் செய்து கொண்டது ஜெசிலாவுக்கு அண்மையில் தெரியவந்தது.
இதுகுறித்து கேட்டபோது ராஜா மற்றும் அவரது பெற்றோா் சோ்ந்து ஜெசிலாவை திட்டி மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஜெசிலா புகாா் அளித்தாா். இதன் பேரில் ராஜா, நாகராஜ், சாந்தி, மஞ்சுளா, தீன்தினகரன், ராஜாவின் 2-ஆவது மனைவி அஞ்சலைதேவி ஆகிய 6 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்த அனைத்து மகளிா் போலீஸாா் ராஜாவை கைது செய்தனா்.
Advertisement