கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (74). விவசாயியான இவா், கடந்த ஏப்.11-ஆம் தேதி இதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கால்தவறி அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தியை அவரது குடும்பத்தினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை பொது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுந்தரமூா்த்தியின் மகன் சுரேஷ் அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.