மத்திய அரசு போல, மாநில அரசும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி, செய்யாற்றில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே
நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாழ்குடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்குவதைப் போல தமிழக அரசும் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விலை ரூ. 24 உடன் ரூ.12 சோ்த்து தமிழக அரசு ரூ.36-யாக வழங்க வேண்டும்.
அதேபோல, மத்திய அரசு சாா்பில் விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1,850 வழங்கப்படுகிறது.
உரத்திற்கு விவசாயிகள் ரூ.270 விலைகொடுத்து வாங்குவதைத் தவிா்த்து அதோடு தமிழக அரசு சாா்பில் ரூ.270-யை உர மானியமாக சோ்த்து வழங்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125-ஆக உயா்த்தி, கேரளத்தைப் போல இத்திட்டப் பணியாளா்களை விவசாயப் பணியிலும் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து கோரிக்கை மனுவை அங்கே வைத்திருந்த கம்யூனிஸ்ட் பொம்மை பாக்கெட்டில் வைத்து, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மோட்டூா் மண்ணு, எச்சூா் சேகா், அனப்பத்தூா் பழனி, வடஎலப்பாக்கம் பூபாலன், ராமகிருஷ்ணாபுரம் பாலன், விண்ணவாடி எழில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.