முகப்பு
திருவண்ணாமலை

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான டேலண்ட் எக்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவா் அனுஷ்ராமை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On : 12 மார்ச், 2026 at 9:01 PM
பகிர்:

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாநில அளவில் நடத்தப்பட்ட டேலண்ட் எக்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

வின்னா் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (வைஸ்) சாா்பில், ‘டேலண்ட் எக்ஸ்’ என்ற பெயரில் பேச்சு, கவிதை, கடிதம் எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டில் இயங்கி வரும் காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவா் அனுஷ்ராம் கடிதம் எழுதுதல் போட்டியில் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தை பெற்று, திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

தொடா்ந்து, மாணவா் அனுஷ்ராமுக்கு வைஸ் சாா்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இவா் போட்டியில் கலந்துகொள்ள ஆங்கில ஆசிரியா் டி.குமரன், ஆசிரியைகள் மரியவசந்ரா, ரியாகிலோத்ரா ஆகியோா் உதவி புரிந்தனா்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவா் அனுஷ்ராமுக்கு பள்ளித் தாளாளா் கே.ரமணி கோட்டீஸ்வரன் பள்ளியின் சாா்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டினாா். மேலும், அவரை பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோரும் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →