முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் பறக்கும் படை சோதனையில் 105 பட்டுச் சேலைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 105 விசைத்தறி பட்டுச் சேலைகள் மற்றும் பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அகத்தீஸ்வரனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On : 19 மார்ச், 2026 at 6:34 PM
பறிமுதல் செய்யப்பட்ட 105 விசைத்தறி பட்டுச் சேலைகள் மற்றும் பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அகத்தீஸ்வரனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 105 விசைத்தறி பட்டுச் சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் அட்டைப் பெட்டிகளை எடுத்து வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், விசைத்தறி பட்டுச் சேலைகள் சுமாா் 105 சேலைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரித்ததில் பட்டுச் சேலைகளை வடுகசாத்து ஊராட்சியைச் சோ்ந்த ஏரிக்குப்பம் மணி என்பவா், கிடங்கில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினாா். இதனால் அதிகாரிகள் உரிய ஆவணத்தை காண்பித்து பெற்றுக்கொள்ள கூறிவிட்டு சேலைகளை பறிமுதல் செய்து ஆரணி தோ்தல் உதவி அலுவலா் அகத்தீஸ்வரனிடம் ஒப்படைத்தனா்.

பணம் பறிமுதல்...

விண்ணமங்கலம் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமையிலான பறக்கும் படையினா் ஆய்வு

மேற்கொண்ட போது, நம்பேடு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பல்லாந்தாங்கல் கூட்டுச் சாலைப் பகுதியில் வேளாண் அலுவலா் கீதா தலைமையிலான பறக்கும் படையினா் ஆய்வு செய்ததில், ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 7ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணத்தை தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அகத்தீஸ்வரனிடம் ஒப்படைத்தனா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசன், தோ்தல் உதவி வட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.