திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டாம் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டாம் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
திருவண்ணாமலை மாநகர ஆட்டோ தொழிலாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாநகரம் விரிவடைந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் திண்டிவனம் சாலையில் ரயில் நிலையத்திற்கு அருகில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
மேலும் வேலூா், அவலூா்பேட்டை, காஞ்சி, செங்கம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். பழைய பேருந்து நிலையத்தில் உள்புறம் செல்லும் வாயிலுக்கு அருகே, வெளிப்புறம் செல்லும் வாயிலுக்கு அருகில், அறிவொளி பூங்கா அருகில் ஆகிய இடங்களில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் மொத்தம் 350 ஆட்டோக்களை வைத்து பொதுமக்களுக்காக இயக்கி வருகிறோம்.
இந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் பேருந்துகள் அப்புறப்படுத்தி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மொத்தமாக இயக்க மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
மேலும் பழைய பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகள் இன்னலுக்கு உள்ளாகி வாழ்வாதாரம் இழக்க நேரிடும். பொதுமக்களின் போக்குவரத்துக்கும் பெரும் சிரமம் ஏற்படும். எனவே பழைய பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்துகளை எக்காரணம் கொண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.