முகப்பு
வேலூர்

திருப்பத்தூர் நகரில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு, சேதமடைந்த சாலைகள், எரியாத தெருவிளக்குகள் என போதிய அடிப்படை வசதிகள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு, சேதமடைந்த சாலைகள், எரியாத தெருவிளக்குகள் என போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் நகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,798 மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் நகரமன்றத்துக்கென ஆணையர் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தற்போது பொறுப்பு ஆணையரே நகராட்சி மூலம் நடைபெறும் அனைத்துப் பணிகளையும் கவனித்து வருகிறார். அதிக பணிச் சுமை காரணமாக நகரில் உள்ள குறைபாடுகளை தீர்க்க முடியவில்லை.
குப்பைத் தொட்டிகள் இல்லாத தெருக்கள்: நகராட்சி அலுவலகத்துக்கு அருகே உள்ள லட்சுமியம்மாள் தெருவில் குப்பைத் தொட்டி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. குப்பைத் தொட்டி அமைக்காவிட்டால் தெருவில் குப்பை கொட்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 அகற்றப்படாத குப்பைகள்: காமராஜர் நகரில் கடந்த 4 மாதங்களாக  குப்பைகள் அகற்றப்படாததால் மலை போல தேங்கியுள்ளன. நகராட்சிப் பணியாளர்கள் தினமும் வந்து குப்பைகளை அகற்றுவதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குப்பைகள் தேங்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
சீரான குடிநீர் விநியோகம் இல்லை: சின்னக்கடைத் தெரு, ஜார்ஜ்பேட்டை பகுதிகளில் கடந்த மாதம் குடிநீர் குழாய்கள் பழுதானதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதையடுத்து நகராட்சி சார்பில் வாரம் ஒருமுறை லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் பல பகுதிகளுக்கு குடிநீர் முறையாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சேதமடைந்த சாலைகள்: திருப்பத்தூரில் பாதாள சாக்கடைப் பணிகள் பல இடங்களில் நிறைவடைந்தும், அதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் தெருக்கள் எப்போதும் புழுதியாகவே உள்ளன. இரவில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகங்கள்:  ஏரிக்கோடி, திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள்பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. மேலும், அக்கட்டடங்களில் சிலர் சமூக விரோதச் செயல்களில்  ஈடுபடுகின்றனர்.
தெருவிளக்குகள் எரிவதில்லை: நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தெருக்களில் தெருவிளக்கு எரியவில்லை. குறிப்பாக அண்ணா நகர், வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கபட்டுள்ள மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இரவு நேரத்தில் பெண்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுத்தம் செய்யப்படாத கால்வாய்கள்: நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் தேங்கியுள்ளன. தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் நகரில் உள்ள கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்களில் கலக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுபோல, அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் திருப்பத்தூர் நகர  மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இக்குறைகளைக் களைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →