வேலூர் அருகே கல்லூரிப் பேராசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பேராசிரியையின் உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
வேலூரை அடுத்த பெருமுகையைச் சேர்ந்தவர் இன்பநாதன் (30). இவருக்கும் ஆற்காடு அருகே உள்ள புங்கனூரைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையான சரண்யாவுக்கும் (25) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவர் வீட்டில் இருந்த சரண்யா ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, பெண்ணின் பெற்றோருக்கு இன்பநாதன் தகவல் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அறிந்த சத்துவாச்சாரி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று, சரண்யாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சரண்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆரோக்கியம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அனைவரும் கலைந்துச் சென்றனர். சரண்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், இச்சம்பவம் குறித்து, வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசனும் விசாரணை நடத்தி வருகிறார்.