வேலூர்

நாட்டுத் துப்பாக்கியுடன் காட்டில் பதுங்கியிருந்த அதிமுக பிரமுகர் கைது

DIN

ஆம்பூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் காட்டில் பதுங்கியிருந்த அதிமுக பிரமுகரை ஆம்பூர் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட துருகம் காப்புக்காடு பொன்னப்பல்லி பீட் வனப்பகுதியில் வனக்காப்பாளர் ஒருவர் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வனப்பகுதியில் ஒரு நபர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளார். வனக்காப்பாளரை கண்டவுடன், துப்பாக்கியை போட்டுவிட்டு அந்த நபர் காட்டுக்குள் தப்பியோடினார்.
இதையடுத்து நாட்டுத் துப்பாக்கியை மீட்டு, வனப்பகுதியின் அருகில் இருந்த குடிசை வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவரிடம் கொடுத்துவிட்டு, தான் திரும்பி வந்து கேட்கும் போது தர வேண்டுமென வனக்காப்பாளர் கூறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தலைமறைவான மர்ம நபர், அந்த மூதாட்டியிடம் சென்று மிரட்டி, நாட்டுத் துப்பாக்கியை பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் வனக்காப்பாளர் மறைத்துள்ளார்.
இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. இதையடுத்து, வனத்துறையினர் காட்டில் பதுங்கியிருந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வனத்தில் துப்பாக்கியோடு பதுங்கியிருந்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து, ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் உதவி வனப்பாதுகாவலர் முஹம்மத் ரபீ, ஆம்பூர் வனச்சரக அலுவலர் ஜெயபால் ஆகியோர் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டவர் பொன்னப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சைதான் (52) என்பதும், வனத்தில் துப்பாக்கியோடு பதுங்கியிருந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து, சைதானை வனத்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உதவி வனப் பாதுகாவலர் முஹம்மத் ரபீ கூறுகையில், "வனத்தில் பதுங்கியிருந்த நபரை நாங்கள் தேடிவந்த நிலையில், அப்பகுதி மக்களே அவரைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காத வனக்காப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT