ஆற்காடு அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆற்காடு வட்டம், திமிரியை அடுத்த புங்கனூர் கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திமிரி-வேலூர் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பேருந்து மற்றும் லாரியை சிறை பிடித்தனர்.
தகவலறிந்த ஆற்காடு வட்டாட்சியர் சரவணன், திமிரி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல்
கைவிடப்பட்டது.