நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா? வேலூர் நகர பயணிகள் எதிர்பார்ப்பு
வேலூர் நகரம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட மற்றும் நாள்கள் குறைக்கப்பட்ட சில முக்கிய ரயில்களை பயணிகளின் நலனைக் கருத்தில்
வேலூர் நகரம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட மற்றும் நாள்கள் குறைக்கப்பட்ட சில முக்கிய ரயில்களை பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
காட்பாடியில் இருந்து விழுப்புரம் வரை மீட்டர் கேஜ்-ஆக இருந்த ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையொட்டி, வேலூர் நகரம் வழியாக இயக்கப்பட்டு வந்த பல ரயில்கள் நிறுத்தப்பட்டன.
பின்னர், அகலப் பாதை அமைக்கும் பணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு முதல் இவ்வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும், மீட்டர் கேஜ்-ஆக இருந்தபோது இயக்கப்பட்ட சில முக்கிய ரயில்கள் அகலப் பாதையாக்க மாற்றப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டதுடன், சில ரயில்கள் இயக்கப்படும் நாள்களும் குறைக்கப்பட்டன. இதனால், பயணிகள் பெருமளவில் சிரமத்துக்கு உள்ளாகினர்.
குறிப்பாக, ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் தற்போது செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த ரயிலை வடமாநில பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த ரயிலின் நாள்கள் குறைக்கப்பட்டதால் 90 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால்கூட டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதேபோல், 7 நாள்களும் இயக்கப்பட்டு வந்த திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில், தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த ரயிலுக்கு பின்னால் 10 நிமிடத்திலேயே திருப்பதி-மன்னார்குடி ரயில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயிலால் எவ்வித பயனும் இல்லை. எனவே, பயணிகளுக்கு பயன்தரத்தக்க வகையில் திருப்பதி-ராமேஸ்வரம், திருப்பதி-புதுச்சேரி ஆகிய விரைவு ரயில்களை மீண்டும் 7 நாள்களும் இயக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வேலூர்-திருப்பதி இடையே இயக்கப்பட்டு வந்த 3 பயணிகள் ரயில்கள் 2013 நவம்பர் முதல் எவ்வித முன்னறிவிப்புமன்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. அந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். விழுப்புரம் - காட்பாடி இடையே சென்றுவரும் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அந்த ரயிலில் மீண்டும் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும் சென்னை-நாகர்கோயில் விரைவு ரயிலை 7 நாள்களும் இயக்கவும், மன்னார்குடி-திருப்பதி இடையே இயக்கப்படும் பாமினி விரைவு ரயிலில் கேன்டீன் வசதியுடன் இயக்கவும் வேண்டும்.
மேலும், வேலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு நேரடியாக ரயில் வசதி கிடையாது என்பதால் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி வரை வாரத்தில் 7 நாள்களும் விரைவு ரயிலை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் நகர ரயில் பயணிகள் டி.பி.ஜி.சுரேஷ், என்.அசோகன் ஆகியோர் கூறியதாவது: மீட்டர் கேஜ் -ஆக இருந்த ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றினால் ரயில் சேவை கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே கிடைத்து வந்த சேவைகளும் குறைக்கப்பட்டிருப்பது ரயில் பயணிகளிடையே ஏமாற்றத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளின் நலன், தேவைகளைக் கவனத்தில் கொண்டு முக்கிய ரயில்களை மீண்டும் இயக்கிடவும், நாள்களை அதிகரிக்கவும் ரயில்வே அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.