ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையக் கட்டடம் திறப்பு
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் சுமார் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்ட ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம், மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் சுமார் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்ட ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையம், மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளிக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து
வைக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே. ஜவரிலால் ஜெயின் தலைமை வகித்தார். மைய நிறுவனர் ரு. கிருபாகரன் வரவேற்றார். ஸ்ரீபுரம் நாராயணிபீடம் சக்தி அம்மா குத்து விளக்கேற்றி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இந்த மையத்தின் நிறுவனர் கிருபாகரன் தன் சொந்த செலவில் 11 ஆண்டுகளுக்கு முன் நெல்லூர்பேட்டையில் 5 மாற்றுத் திறன் குழந்தைகளுடன் ஆனந்த குழந்தைகள் மறுவாழ்வு மையத்தைத் தொடங்கினார்.
குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகளை இலவசமாக வேனில் அழைத்து வந்து, இந்த மையத்தில் படிக்க வைத்தார். மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 75 குழந்தைகள் இந்த மையத்தில் பயில்கின்றனர்.
இவர்களில் வெளியூரைச் சேர்ந்த 25 மாணவர்கள் மையத்திலேயே தங்கி படிக்கின்றனர். இவர்களைப் பயிற்றுவிக்க 9 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததால், இட வசதி போதவில்லை என்பதால் காக்காதோப்பில் போதிய வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மைய செயலர் ஜி. ரவி, பொருளாளர் ரு. காமராஜ், இயக்குநர்கள் மருத்துவர் கே. ரமேஷ், கு. கிருஷ்ணன், பி. உமேஷ்குமார், சீ. சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.