முகப்பு
வேலூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதற்கான புதிய கட்டடம் க

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:09 PM
பகிர்:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதற்கான புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், நோயாளிகளும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 3 ஆயிரம் புற நோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் வருகின்றனர். இந்த மருத்துவமனை மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனையாக உள்ளது.
இந்நிலையில், இங்கு செயல்பாட்டிலிருந்த அவசர சிகிச்சை பிரிவு, கண் பரிசோதனை மையம், கண் அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண், பெண் தனித்தனி பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம் ஆகிய 4 கட்டடங்கள் பழைமையானவை எனக் கூறி, கடந்த 6 மாதங்களுக்கு முன் அவை இடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை புதிய கட்டடங்களுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் வெயிலில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை பற்றாக்குறை உள்ளது. 
மகப்பேறு பிரிவில் மருத்துவர்கள் பற்றாக்குறை..: மகப்பேறு மருத்துவப் பிரிவில் 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது இரு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நிகழ்கின்றன. இவற்றில் 10-க்கும் மேற்பட்டவை அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுகின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறையால் பணியில் உள்ள இரு மருத்துவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சிடி ஸ்கேன் பிரிவில்..: சிடி ஸ்கேன் எனப்படும் முழு கதிரியக்க பரிசோதனைக் கூடத்தில் "ரேடியோகிராப்பர்' எனப்படும் கதிர்ப்பட பதிவாளர் பணியில் 4 டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும். ஆனால், 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 24 மணிநேரமும் இயங்க வேண்டிய இப்பிரிவு மாலை 5 மணிவரை மட்டுமே இயங்குகிறது. மாலை 5 மணிக்கு மேல் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு பொதுமக்கள் தனியாரிடம் செல்லவேண்டியுள்ளது.
எம்ஆர்ஐ பிரிவு தேவை..: திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் காயமடைவோர் முதலில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரப்படுவர். ஆனால், இங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எனப்படும் தலைக்காய சிகிச்சைப் பிரிவு வசதி இல்லாததால், பலத்த காயமடைந்தவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவோரில் சிலர் வழியிலேயே உயிரிழக்கின்றனர். 
கூடுதல் மருத்துவர்கள் தேவை..: பழைய பணி நியமனப்படி இந்த மருத்துவமனையில் 29 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப இதை இரட்டிப்பாக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மருத்துவர்கள் பற்றாக்குறையால் விஷம் அருந்தியவர்கள், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவர்கள், தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவதில்லை என பணியில் உள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செவிலியர் பயிற்சி கல்லூரி வேண்டும்..: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மக்கள் நல வாழ்வுத் துறை விவாதத்தின் போது திருப்பத்தூரை மையமாகக் கொண்டு செவிலியர் பயிற்சிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ நல்லதம்பி கோரிக்கை விடுத்தார்.
ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்..: திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கென்று ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸை நாட வேண்டி உள்ளது.
நிலுவையில் உள்ள மத்திய அரசின் திட்டம்..: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தங்குவதெற்கென்று தனியாக கட்டடங்கள் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூர் நகராட்சிக்கு ரூ. 75 லட்சம் வழக்கப்பட்டது. ஆனால், நிரந்தர ஆணையர் இல்லாததால் இப்பணி நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கட்டடம் கட்டுவதற்காக மண் பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணிகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், இடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்களை விரைவில் கட்டித்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →