4 கால்நடைகள் மர்மச் சாவு
குடியாத்தம் அருகே 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தன.
குடியாத்தம் அருகே 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தன.
குடியாத்தத்தை அடுத்த கல்லேரியைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ் (35). இவருக்குச் சொந்தமான 2 பசு மாடுகள், 2 கிடாரிகள் திங்கள்கிழமை மேய்ச்சலுக்குச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து தொட்டியில் தண்ணீர் குடித்துள்ளன.
சிறிது நேரத்தில் வயிறு வீங்கி, வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒவ்வொன்றாக இறந்தன. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலபதி கொடுத்த தகவலின்பேரில், வட்டாட்சியர் பி.எஸ்.கோபி விசாரணை மேற்கொண்டார்.
நகர காவல் நிலையத்திலும் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் ஏதாவது விஷச்செடியை மாடுகள் மேய்ந்ததால் அவை இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவர் வந்து பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே கால்நடைகள் இறப்புக்கு காரணம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.