கடை வாடகை நிலுவைத் தொகை: திருப்பிச் செலுத்த மாநகராட்சி கெடு
வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ. 14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
வேலூர்கடை வாடகை நிலுவைத் தொகை: திருப்பிச் செலுத்த மாநகராட்சி கெடு
வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ. 14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ. 14 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு நிலுவைத் தொகையான ரூ. 8 கோடியை மார்ச் 21-ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
வேலூர் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமாக உள்ள 1,752 கடைகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ள புதிய வாடகை அறிவிப்பில் 500 சதவீதம் முதல் 1000 சதவீதம் வரை வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான இந்த வாடகை உயர்வை எதிர்த்து மாநகராட்சி கடை வணிகர்கள் போராட்டம் நடத்தி வருவதுடன், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளனர்.
புதிய வாடகை ஒப்பந்த அறிவிப்பு வெளியான 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ரூ.14 கோடி வாடகை நிலுவை வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. மேலும், வாடகை நிலுவைகளை உடனடியாகச் செலுத்தாத கடைகளைப் பூட்டி "சீல்' வைக்கப்படும் என்றும் எச்சரித்து வணிகர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
இதையடுத்து மாநகராட்சி கடை வணிகர்கள் சார்பில் வாடகை நிலுவைகளைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கோரப்பட்டதுடன், முதல்கட்டமாக கடந்த 2016-ஆம் ஆண்டுக்குரிய வாடகை நிலுவையை மட்டும் செலுத்தவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதை ஏற்று கடந்த 2016-ஆம் ஆண்டுக்குரிய வாடகை நிலுவைத் தொகையான ரூ. 8 கோடியை மார்ச் 21-ஆம் தேதிக்குள் 3 தவணைகளில் திருப்பிச் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்திருப்பதாக வேலூர் மாநகராட்சி கடை வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஆர்.பிச்சாண்டி கூறியதாவது:
புதிய வாடகை உயர்வு ஒப்பந்தப்படி வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு 500 முதல் 1000 சதவீதம் வரை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சிகளில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாறுபாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் சதவீத அடிப்படையில் மட்டும் வாடகை உயர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொ டர்பாக உயர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 21-ஆம் தேதிக்குள் வாடகை நிலுவைகளை உடனடியாக திருப்பிச் செலுத்த மாநகராட்சி கடை வணிகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
அப்போது, சங்க நிர்வாகிகள் ஆர்.பி.ஞானவேலு, அ.ராஜகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.