கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாத அரசு அலுவலகங்கள்
திருப்பத்தூர் ஊராட்சிக்குள்பட்ட அண்ணாண்டப்பட்டி கிராமத்தில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன.
திருப்பத்தூர் ஊராட்சிக்குள்பட்ட அண்ணாண்டப்பட்டி கிராமத்தில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அண்ணாண்டப்பட்டி ஊராட்சி மன்றத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது இயங்கி வரும் ஊராட்சி மன்றக் கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் புதிய அலுவலகக் கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி, அம்பலவாணன் வட்டம் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய கட்டடம் கட்டி முடித்து பல மாதங்களாகியும், திறப்பு விழா நடைபெறவில்லை. இதனால், பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திலேயே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிய கட்டடம் கட்டியும், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல, ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அருகிலேயே கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கான அலுவலகமும் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
கிராம முன்னேற்றத்திற்கான திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசால் துவங்கப்பட்ட வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகக் கட்டடமும் பல மாதங்களாகப் பூட்டியே கிடக்கிறது. இதுவரை இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவும் நடைபெறவில்லை.
இந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தால், சார்புத்தொழில் வல்லுநர்களைக் கண்டறிந்து உரிய பயிற்சி அளிப்பதற்கும், வறுமையை ஒழிக்கவும், ஏழை, எளியோருக்கு மட்டுமின்றி மகளிர் சுய உதவிக் குழுவினரின் கலந்தாலோசனைகளை நடத்துவதற்கும் இது பயன்படும்.
எனவே, இந்த இரண்டு அரசு அலுவகங்களையும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனிடம் கேட்டபோது, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கட்டடங்கள் திறப்பு விழா செய்ய முடியவில்லை. விரைவில் திறப்பு விழாவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.