பணியாளர் பற்றாக்குறையால் காலதாமதமாகும் மின் பராமரிப்புப் பணிகள்
திருப்பத்தூரில் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் துறையின் பராமரிப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.
திருப்பத்தூரில் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையால் மின் துறையின் பராமரிப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்டு, சிங்காரப்பேட்டை, குடியாத்தம், கொரட்டி, வெங்களாபுரம், சுந்தரம்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, மிட்டூர், குனிச்சி, பேராம்பட்டு, விஷமங்கலம், திருப்பத்தூர்-1, 2, வடக்கு, மேற்கு, புதுப்பேட்டை-கிழக்கு, மேற்கு மற்றும் கந்திலி என மொத்தம் 17 பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், இங்கு பணியிலிருந்த கம்பியாளர், கள உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்றனர். ஆனால், அதற்குப் பதிலாக இதுவரை பணியிடம் நிரப்பப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பணியிலிருக்கும் பணியாளருக்கு விடுப்பு கிடைப்பதில் பிரச்னை ஏற்படுவதாகவும், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் சிறப்பு பராமரிப்புப் பிரிவுகளில் மின்மாற்றிகளைப் பழுதுபார்க்க அடிப்படைப் பணியாளர்கள் இல்லையெனவும் கூறப்படுகிறது.
ஒரு பிரிவில் 7 கம்பியாளர்கள் மற்றும் 7 கள உதவியாளர்கள் என குறைந்தபட்சம் 14 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், ஒருவர் மற்றும் இருவர் மட்டுமே பணியில் உள்ளனராம்.
இதன் காரணமாக மின் பழுது, பாராமரிப்பு உள்ளிட்ட பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வாடகைக் கட்டடத்தில்...
இந்நிலையில், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகக் கட்டடத்தை, விரைவில் சொந்தக் கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அலுவலகத்தை கட்டுவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூரிலிருந்து, ஜலகாம்பாறை செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தையொட்டி, சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டடம் கட்ட போதிய முயற்சிகள் எடுக்கப்படாததால் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக கட்டடமும் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
புதிய கட்டடம் கட்டப்பட்டால் செயற்பொறியாளர் அலுவலகமும், அங்கே இடம் பெயர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர்
ஏஞ்சலா சகாயமேரியிடம் கேட்டதற்கு, அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறையால், இங்கு பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களும், பழைய பணியையே செய்ய வேண்டிய நிலை உள்ளது. விரைவில் பணியாளர்களை நியமிக்க உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், சொந்தக் கட்டடம் கட்ட அனுப்பிய மண் பரிசோதனையில், அங்கு கட்டடம் கட்ட மண்ணின் வளம் தகுதியுடையதாக இல்லை. எனவே அஸ்திவாரத்தின் பலத்தை கூடுதலாக்க வேண்டும். இதுகுறித்த கட்டடத்தின் மறு மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஆணை வந்தவுடன் கட்டடப் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.