சாலையோர மரங்களில் விளம்பரப் பலகைகள் அகற்றப்படுமா?
சாலையோர மரங்களில் மாட்டப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள் அகற்றப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சாலையோர மரங்களில் மாட்டப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள் அகற்றப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அவ்வப்போது பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அண்மைக் காலமாக மரங்களில் விளம்பரப் பலகைகளை மாட்டுவது வாடிக்கையாகி வருகிறது. தற்போது திருப்பத்தூரிலிருந்து தருமபுரி, சேலம், பெங்களூரு, திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையின் ஓரங்களில் இருக்கும் மரங்களில் விளம்பரப் பதாகைகளும் பலகைகளும் ஆணி அடித்து மாட்டப்படுகின்றன.
இதனால் மரங்களின் சராசரியான வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியது:
மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமான காற்றை சுவாசிக்க ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயுவை வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி காய், பழம் என பல்வேறு பயன்களை மனிதன் அனுபவிக்க மரங்கள் பயன்படுகின்றன.
இந்நிலையில், தற்போது சாலையோரங்களில் உள்ள அனைத்து மரங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை ஆணி அடித்து தொங்கவிட்டுள்ளனர். இதைக் காணும்போது மிகவும் வேதனை அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் இந்த சூழலில் புதிய மரங்களை நடுவதை விட்டுவிட்டு, பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த மரங்களின்மீது ஆணி அடித்து அதன் வளர்ச்சியையும், பலன்களையும் தடுக்க வேண்டாம்ர். மேலும், இவ்வாறு மரங்களில் விளம்பரம் செய்பவர்கள்மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்று வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜனிடம் கேட்டதற்கு அவர் கூறியது: சாலையோரங்களில் விளம்பரப் பலகை வைப்பது சட்டப்படி குற்றமாகும். திருப்பத்தூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் உள்ள மரங்களில் உள்ள விளம்பரப் பதாகை மற்றும் பலகைகளை ஒரு வார கால அவகாசத்திற்குள் அவர்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும். மீறினால் பதாகையில் உள்ள நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே, இனி மரங்களின் மீது ஆணி அடித்து விளம்பர பதாகைகளை மாட்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.