"கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வது அவசியம்'
கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்திட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள்
கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்திட வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் தலா ஒரு மாணவ, மாணவிக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ், இலவசமாக உயர்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை 628 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இதில், 75 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். இந்நிலையில், விஐடியில் ஸ்டார்ஸ் திட்டத்தில் பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
இந்தியாவில் லட்சக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கிடைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அந்த மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். மத்திய அரசு பட்ஜெட்டில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும். அதேபோல் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.
கல்வியால்தான் கொரியா, ஜப்பான், சீனா போன்றவை வளர்ச்சி அடைந்த நாடுகளாக உள்ளன. இதேபோல் இந்தியாவும் அனைவருக்கும் கல்வி கிடைக்க போதிய வசதி செய்தால் நாமும் வளர்ச்சி அடைந்த நாடாகி விடலாம். இந்தியாவில் 18 முதல் 23 வயதுக்கு உள்பட்ட 14 கோடி பேர் உள்ளனர். இதில், 3.5 கோடி பேர் மட்டுமே உயர்கல்வி பயிலுகின்றனர். இந்த எண்ணிக்கை உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், படித்த மாணவர்கள் கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று பணியாற்ற வேண்டும். அதேபோல் மாணவர்களும் விவசாயக் கல்வி பயில வேண்டும். அரசும் வருவாய் ஈட்டும் தொழிலாக விவசாயத்தை மாற்ற போதிய முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் பேசியது:
ஆங்கிலம் பேசுவதற்கு யாரும் அச்சப்படக்கூடாது. சிறிய சிறிய வார்த்தைகளாக பேசிப் பழகிக் கொள்ளலாம். மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை மட்டும் எப்பொழுதும் இருக்கக்கூடாது. விவேகானந்தர் கூற்றுப்படி வானமே உன் எல்லை, நீ நினைத்த இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராட வேண்டும். தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,027 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை அமைத்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் ஆற்றல் வளரும் என்றார்.
டி.சி.எஸ். நிறுவன உதவிப் பொது மேலாளர் ஸ்ரீராம் ஜோஷி பேசுகையில், ஒருவருக்கு உணவு தானம் அளிப்பதால் அது அந்த வேளை மட்டும் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு கல்வி கிடைக்க உதவினால் அது அவர்களின் வாழ்க்கை மட்டுமின்றி, அந்த குடும்பத்தின் சூழ்நிலையையே மாற்றிவிடும் என்றார்.
முன்னதாக, ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.மீனாட்சி வரவேற்றார். விஐடி பதிவாளர் கே.சத்தியநாராயணன், விஐடி வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் சாமுவேல்ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தினார். ஸ்டார்ஸ் திட்ட 2008-ஆம் ஆண்டு மாணவர் தழுவ குழந்தை நன்றி கூறினார்.