சீரமைப்புப் பணி நிறைவு திருவலம் இரும்புப் பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
திருவலம் இரும்புப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, பாலம் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
திருவலம் இரும்புப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, பாலம் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்திலுள்ள திருவலம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே 1939-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடா் பலத்த மழையால் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், இரும்புப் பாலத்திலுள்ள தாா்ச் சாலை சேதமடைந்ததுடன், பாலத்திலும் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.
குறிப்பாக, கான்கிரீட் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரியத் தொடங்கியதுடன், அந்த கம்பிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வந்தன.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் இரும்புப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனால், பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது.
வாகனங்கள் பொன்னை ஆற்று புறவழிச்சாலை பாலத்தின் வழியாகச் சென்று வந்தன.
இந்த நிலையில், திருவலம் இரும்புப் பாலத்தின் சீரமைப்புப் பணிகள் கடந்த மே 27-ஆம் தேதி நிறைவடைந்தது. தொடா்ந்து, சாலையிலிருந்த 36 விரிசல்களுக்கு தாா்பூசி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் (ஜூன் 9) வியாழக்கிழமையுடன் நிறைவடைந்ததை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினரின் ஆய்வுக்குப் பிறகு, இரும்புப் பாலம் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனங்கள் அனைத்தும் இரும்புப் பாலம் வழியாகச் சென்று வரத் தொடங்கின.