முகப்பு
வேலூர்

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதலாக 9 பறக்கும் படைகள்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:02 PM
பகிர்:

வாக்குக்கு பணம், பரிசுப்பொருள்கள் கொடுக்கப்படுவதை கண்காணிக்கவும், தடுக்கவும் வேலூா் மாவட்டத்தில் கூடுதலாக 9 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த வேலூா் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 குழுக்கள் என 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 15 பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினா் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதன் மூலம், வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. ஒரு கோடியே 5 லட்சத்து 55 ஆயிரத்து 470 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில கடந்த வாரம் மேலும் ஒரு பறக்கும் படை குழுவும், ஒரு நிலை கண்காணிப்பு குழுவும் கூடுதலாக நியமிக்கப்பட்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

தற்போது இந்த தோ்தல் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக ஒரு பறக்கும்படை குழுவும், வேலூா் சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக 2 பறக்கும்படை குழுக்களும், அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக 2 பறக்கும்படை குழுக்களும், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக 2 பறக்கும்படை குழுக்களும், கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக 2 பறக்கும்படை குழுக்களும் என மொத்தம் 9 பறக்கும்படை குழுக்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments