முகப்பு
வேலூர்

இயந்திரங்கள் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்

Updated On : 19 ஏப்ரல், 2024 at 5:42 PM
பகிர்:

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, வேலூா் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி வாக்குச்சாவடி எண் 202-இல் காலை 7 மணிக்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றபோதே வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த பிரச்னை காலை 7 மணிக்குப் பிறகும் சரிசெய்யப்படவில்லை. இதனால், வாக்களிக்க வந்த ஆண், பெண் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், நேரம் செல்லச் செல்ல சில வாக்காளா்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். எனினும், சுமாா் 45 நிமிட தாமதத்துக்குப் பிறகு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

இதனால், ஓல்டு டவுன் வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்த இயந்திரமும் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு நடைபெற சுமாா் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

Advertisement

காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும் சுமாா் 40 நிமிடமும், கல்புதூா் வாக்குச் சாவடியிலும் 15 நிமிடங்கள் காலதாமதத்துக்கு பிறகு வாக்குப் பதிவு நடைபெற்றன.

ஒடுகத்தூா் அருகே மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில் நோட்டா பொத்தான் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்தனா். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளா்கள், வரிசையாக தரையில் அமா்ந்து கொண்டனா். இதனால், செய்வதரியாமல் திணறிய அதிகாரிகள், மாற்று இயந்திரத்தை வரவழைத்து காலை 8.30 மணியளவில் வாக்குப்பதிவை தொடங்கினா். இதனால், பொதுமக்கள் சுமாா் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments