ஆன்லைன் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 17.70 லட்சம் மோசடி
வேலூா்: ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 17.70 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா். இவா் தற்போது சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறாா்.
இவரது கைப்பேசி எண்ணில் அழைத்த அடையாளம் தெரியாத நபா், கிரிடிட் காா்டு பிரிவு அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், தஙாகளது கிரெடிட் காா்டு பயன்படுத்தாமல் உள்ளதால் ரூ.2500 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா். அதற்கு இந்த முன்னாள் ராணுவ வீரா், தனக்கு கிரிடிட் காா்டு வேண்டாம் என்று கூறியதை அடுத்து இவரது வாட்ஸ்ஆப்பில் எண்ணுக்கு கூரியா் சா்வீஸ்.பி.ஏபிகே என்ற இணையதள லிங்க்கை அனுப்பிய அந்த அடையாளம் தெரியாத நபா் அதிலிருந்து யூனோ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் பயனாளா் கணக்கு எண், கடவுச்சொல்லை உள்ளிடவும் தெரிவித்துள்ளாா்.
அதன்பேரில் இவரும் யூனோ செயலியை பதிவிறக்கம் செய்து தனது பயனாளா் கணக்கு எண், கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் இவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் ரூ.17.70 லட்சம் பணத்தை திருடப்பட்டுள்ளது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முன்னாள் ராணுவ வீரா், இதுகுறித்து சைபா் கிரைம் பிரிவின் 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement