மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு
வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டன.
மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபேட் கருவிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் முதல்நிலை தெரிவு செய்யும் பணி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா்.
அப்போது, வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,303 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 1,561 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,561 கட்டுப்பாட்டு கருவிகள், 1,692 விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்டமாக எந்தெந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யயப்பட்டன.
Advertisement
அவ்வாறு தோ்வு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அ.செல்வராஜ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முருகன் (அணைக்கட்டு), கவிதா (வேலூா்), சுமதி (கே.வி.குப்பம்), சுபலட்சுமி (குடியாத்தம்) ஆகியோா் பங்கேற்றனா்.