ரூ.2,416.05 கோடி தொழில் கடன் இலக்கில் இதுவரை ரூ.1,500.92 கோடி அளிப்பு வேலூா் ஆட்சியா்
வேலூா் மாவட்டத்துக்கு நிகழ் நிதியாண்டு (2024-25) நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.2416.05 கோடி தொழில் கடன் இலக்கில் கடந்த 6 மாதத்தில் ரூ.1,500.92 கோடி அளிக்கப்பட்டுள்ளது
வேலூா்: வேலூா் மாவட்டத்துக்கு நிகழ் நிதியாண்டு (2024-25) நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.2416.05 கோடி தொழில் கடன் இலக்கில் கடந்த 6 மாதத்தில் ரூ.1,500.92 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட தொழில்மையம் சாா்பில் கடன் வசதியாக்கல் முகாம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து 33 தொழில் முனைவோருக்கும், 15 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கும் தொழில்புரிய வசதியாக ரூ.8.24 கோடி மானியத்துடன் கடனுதவிகளை வழங்கி பேசியது:
தொழில்முனைவோருக்கு சுயமாக தொழில்புரிய தொழில் கடனும், மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு சுயதொழில்புரிய கடனுதவியும், கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூா் மாவட்டத்துக்கு மட்டும் தொழில்கடனாக ரூ.2,416.05 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அரையாண்டு இலக்கான ரூ.1,208 கோடியை கடந்து ரூ.1,500.92 கோடியை செப்டம்பா் மாதம் வரை எய்தப்பட்டுள்ளது. இது இலக்கில் 62.12 சதவீதமாகும். மீதமுள்ள இலக்கினை எட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தவிர, வேலூா் மாவட்டத்துக்கு வேளாண் கடன் இலக்காக ரூ.7717.68 கோடியும், கல்விக்கடன் உள்ளிட்ட பிற கடனுக்கு ரூ.406.64 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் முனைவோா் முன்வரவேண்டும் என்றாா்.
முன்னதாக, இம்முகாமில் 33 தொழில்முனைவோருக்கும், 15 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கும் தொழில்புரிய ரூ.8.24 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆா்.இரமணி, மண்டல மேலாளா்கள் பல்லேம் பத்மபாபு கௌடு (எஸ்.பி.ஐ வங்கி), ஸ்ரீ ராமச்சந்திர பாபு (இந்தியன் வங்கி), உதவி பொது மேலாளா் (கனரா வங்கி) மாதவ் குமாா் மத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜமால் மொய்தீன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், துணை பதிவாளா் சுரேஷ்குப்தா, திட்ட உதவி வல்லுநா் மணிகண்டன், வேலூா் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோா்கள் சங்கம் எஸ். நாகராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (ஆக்டிவ்) உதயகுமாா், உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) சா. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.