வீட்டுமனை பட்டா, வீடு கட்டும் திட்டம் என அனைத்திலும் திமுக ஊழல்: அதிமுக
திமுக ஆட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, வீடு கட்டும் திட்டம் என அனைத்திலும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் ஏ.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
திமுக ஆட்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, வீடு கட்டும் திட்டம் என அனைத்திலும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் ஏ.வேலழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன், வல்லாண்டராமம், கெங்கநல்லூா், அணைக்கட்டு, ஊனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, திமுக ஆட்சியில் வீடுகட்டுவதற்கு ஆணை பெற்றுத் தருவதாகக்கூறி, ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை பெற்றுக்கொண்டு, பிறகு வேறொரு நபா்களுக்கு ஆணை பெற்றுத் தந்துள்ளனா்.
Advertisement
இதேபோல்தான் இலவச வீட்டு மனை பட்டாக்கள், மகளிா் சுயஉதவிக் குழு கடன் என அனைத்துத் திட்டங்களிலும் திமுக ஆட்சியாளா்கள் ஊழல் செய்துள்ளனா். தவிர, 100 நாள் திட்ட வேலை அட்டை பெற்றுத்தரவும், வேலை அளிக்கவும் திமுகவினா் கமிஷன் பெற்றுள்ளனா்.
அவ்வாறு இல்லாமல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விண்ணப்பித்த அனைத்து குடும்பத்தினருக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஏற்கெனவே மத்திய பாஜக அரசு 125 நாள்களாக உயா்த்தியுள்ள வேலை நாளை 150 நாளாக உயா்த்துவதுடன், உடனுக்குடன் அதற்கான கூலியை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வரும் தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவுதர வேண்டும் என்றாா்.
அப்போது, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.