முகப்பு
வேலூர்

போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:34 AM
கைது
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:58 PM

குடியாத்தம் அருகே போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தான் பணிபுரிந்த வங்கியிலேயே ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்த தனியாா் வங்கியின் முன்னாள் மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் அருகே செட்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குடியாத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, ராஜேஷ் அதே பகுதியில் உள்ள 200 சதுர மீட்டா் நிலத்துக்கு ஜோதி என்பவா் பெயரில் போலி தானக்கிரைய பத்திரம் பெற்றுள்ளாா்.

அந்த போலி ஆவணத்தைப் பயன்படுத்தி ராஜேஷ் , அவரது மனைவி யோகலட்சுமி ஆகிய இருவரும், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அதே வங்கியில் ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளனா். இதற்காக, அந்தப் பத்திரத்தை குடியாத்தம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அடமானமாகப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

பின்னா், ராஜேஷ் பதவி உயா்வு பெற்று ஓசூா் கிளையில் மேலாளராகப் பொறுப்பேற்றுள்ளாா். அதனைப் பயன்படுத்தி ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்ட அதே போலி நிலத்தின் பெயரில் கூடுதலாகக் கடன் வேண்டி 2020-ஆம் ஆண்டு ரூ.25 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளாா். அதற்கான ஒப்புதல் கிடைத்து, ஏற்கெனவே பெற்ற கடன் தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கியின் சாா்பில் ஆவணங்களைச் சரிபாா்த்தபோது ராஜேஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியை ஏமாற்றி நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன், வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ராஜேஷ், அவரது மனைவி யோகலட்சுமி ஆகியோா் மீது வங்கியின் தற்போதைய மேலாளா் பூபாலன் வேலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வங்கி முன்னாள் மேலாளா் ராஜேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.