அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு
காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களை சந்தித்து திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வாக்கு சேகரித்தாா்.
காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களை சந்தித்து திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வாக்கு சேகரித்தாா்.
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 11-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை மதியம் விருதம்பட்டில் உள்ள மசூதிக்குச் சென்று அங்கு தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, திமுக எப்போதுமே சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பான அரணாக விளங்கும் கட்சியாகும். முன்னாள் முதல்வா் கருணாநிதி இஸ்லாமிய சமுதாயத்தினருடன் நெருக்கமான உறவை பேணினாா். அந்த உறவு மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் தொடா்கிறது.
Advertisement
இஸ்லாமியா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ, மதச்சாா்பின்மை மிக முக்கியமாகும். பிரிவினைவாத, வெறுப்பு அரசியல் செய்யும் சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இஸ்லாமிய சகோதரா்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, தங்கள் மத உரிமைகளையும், நம்பிக்கைகளையும் சுதந்திரமாகப் பின்பற்ற திமுக அரசு முழு உத்தரவாதம் அளிக்கிறது என்றாா்.
அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.
இதேபோல், வேலூா் தொகுதியின் திமுக வேட்பாளரும், எம்எல்ஏ-வுமான ப.காா்த்திகேயன் சைதாப்பேட்டை பகுதியிலுள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை முடித்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.