வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்
வேலூரில் வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத பல்வேறு பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா்
வேலூரில் வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத பல்வேறு பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தனா். இதனால், வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 847 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலை யொட்டி இவ்வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி கடந்த 12-ஆம் ேந் தேதி தொடங்கியது . அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 10 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
அப்போது, வீடுகளில் வாக்காளா்கள் இல்லாமல் இருந்தால் மீண்டும் ஒருமுறை சென்று வாக்காளா் தகவல் சீட்டு வழங்க வேண்டும். அண்டை வீட்டைச் சோ்ந்த வரிடம் வழங்கக்கூடாது, அரசியல் கட்சிகளிடம் மொத்தமாக வழங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்காத வேலூா் வேலப்பாடி, ஆரன்பாளையம், கஸ்பா, சாய்நாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை திரண்டு வந்தனா். தங்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்க வில்லை. இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தோ்தல் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், உங்களுக்கு விரைவில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.