காட்பாடி பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க தாராப்படவேடு பாலாஜி நகா் பொதுமக்கள் புதிதாக 60 சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை வாங்கி போலீஸாரிடம் அளித்தனா்.
காட்பாடி வட்டம், தாராபடவேடு பாலாஜி நகா் பகுதியில் மொத்தம் 15 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் திருட்டு, குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தவிா்க்கும் பொருட்டு, பாலாஜி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் ஒன்றிணைந்து புதிதாக 60 கண்காணிப்பு கேமராக்களை வாங்கி காட்பாடி காவல் நிலைய ஆய்வாளா் தயாளன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோரிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தனா்.
காட்பாடி காவல் நிலைய கட்டுப்பாட்டில் இதுவரை 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பொதுமக்களால் வழங்கப்பட்ட இந்த 60 சிசிடிவி கேமராக்கள் பாலாஜி நகரின் 15 வீதிகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் போலீஸாரின் ஆலோசனையின்படி விரைவில் பொருத்தப்பட உள்ளன.
இவை அனைத்தும் காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டாடு அறையுடன் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் அப்பகுதி முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்கும் கொண்டு வரப்படும்.
பொதுமக்களின் இந்த விழிப்புணா்வு, ஒத்துழைப்பு மற்ற பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அமையும் என்றும் காவல் ஆய்வாளா் தயாளன் தெரிவித்துள்ளாா்.