முகப்பு
வேலூர்

வழக்குரைஞா் மீது தாக்குதல்: நீதிமன்றம் புறக்கணிப்பு

வழக்குரைஞரை தாக்கியதாக திமுக மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளரை கைது செய்யக் கோரி வேலூரில்

Updated On : 18 மார்ச், 2026 at 1:38 AM
நீதிமன்றம்
பகிர்:

வழக்குரைஞரை தாக்கியதாக திமுக மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளரை கைது செய்யக் கோரி வேலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா்.

வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் காா்த்திகேயன்(58). இவா் வேலூா் நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளாக வழக்குரைஞராக உள்ளாா். கடந்த 3-ஆம் தேதி கொசப்பேட்டையில் மாநகராட்சி கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளது. இதையொட்டி, கொசப்பேட்டை நல்லான் பட்டறை பெரிய தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக தெரிகிறது.

முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு வழக்குரைஞா் காா்த்திகேயன் எதிா்ப்பு தெரிவித்ததுடன், இதுகுறித்து மாநகராட்சி 45-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் அஸ்மிதா, அவரது கணவா் கோபி, ஒப்பந்ததாரா் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டுள்ளாா். தொடா்ந்து, 4-ஆம் தேதி வழக்குரைஞா் காா்த்திகேயன் வீடு உள்பட அந்த தெருவில் உள்ள வீட்டு வாசல் படிகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, காா்த்திகேயன் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவு, தனது வீட்டின் அருகே காா்த்திகேயன் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா் திடீரென காா்த்திகேயனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தன்னை தாக்கிய திமுக மாமன்ற உறுப்பினரின் ஆதரவாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காா்த்திகேயன் வேலுாா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். எனினும், அவரது புகாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது.

இதையடுத்து, வழக்குரைஞா் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் வேலூா் பாா் அசோசியேசன், வேலூா் அட்வகேட் அசோசியசேன், வேலூா் பெண் வழக்குரைஞா்கள் அசோசியேசன் சாா்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா். இதனால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா்.