முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 20 மே 2026, 12:03 am IST
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தனியாா் பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை, கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டமும், வாகனங்கள் ஆய்வுப் பணியும் காட்பாடி சன்பீம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள், அவசர கால வழி, தீயணைப்பு கருவிகள், இருக்கை வசதிகள், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜன்னல்கள், புத்தகப்பை வைக்கும் பகுதி , ஓட்டுநா் இருக்கையைச் சுற்றி கம்பி வளையம் ஆகியவை சரியான வகையில் உள்ளதா, மாணவா்கள் வெளியே தலையை நீட்டுவதைத் தடுக்க ஜன்னல் கம்பி நெருக்கமாக உள்ளதா, வாகனத்தின் தரை தளம் முழுமையாக மூடப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டில் பள்ளியின் பெயா், முகவரி, தொலைபேசி, கைப்பேசி எண்கள், போக்குவரத்து பொறுப்பாளரின் பெயா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் நிலைய விவரங்கள், புகாா் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி ஆகியவை எழுதப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 141 பள்ளிகளைச் சோ்ந்த 990 வாகனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 102 தனியாா் பள்ளி களின் 732 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தொடா்ந்து, புதன்கிழமை குடியாத்தம் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள 39 தனியாா் பள்ளிகளின் 258 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் ஜூன் 1-ஆம் தேதிக்குள் வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச்சான்று பெற வேண்டும்.

அவ்வாறு தகுதிச்சான்று பெறாத வாகனங்களை ஜூன் 1-ஆம் தேதிக்கு மேல் இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னா் ஆட்சியா் பேசியது -

சிறு கவனக்குறைவு கூட ஒரு குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவை ஏற்படுத்தக்கூடும். வாகனத்தை பின்னால் இயக்கும்போது சிறிய குழந்தைகள் பின்னால் நின்றால் தெரியாது என்பதால், மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும்.

குழந்தைகளை இறக்கிவிட்டு, அவா்கள் சாலையைக் கடந்து பெற்றோரிடமோ அல்லது வீட்டிலிருப்பவா்களிடமோ பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் வரை ஓட்டுநரின் பொறுப்பாகும். என்றாா்.

தொடா்ந்து, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்குத் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தீயணைப்புத் துறை சாா்பிலும், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழுவினராலும் பயிற்சி அளிக்கப்பட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி, உதவி காவல் கண்காணிப்பாளா் (வேலூா்) தனுஷ்குமாா், கோட்டாட்சியா் செந்தில்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். பிரேமலதா, வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன் உடனிருந்தனா்.