ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் மார்க்கெட்டிங் மேளா புதன்கிழமை நடந்தது.
பயனீர் கலை, அறிவியல் கல்லூரியின் வணிகம், மேலாண்மை, வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய துறைகள் சார்பில், மாணவ மாணவிகளிடம் மார்க்கெட்டிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மார்க்கெட்டிங் மேளா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் தாங்கள் அமைத்த அரங்குகளில் ஆபரணங்கள், ஆடைகள், மரக்கன்றுகள், செடிகள், விளையாட்டுப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்தார். கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.பத்மலோசனா, துணை முதல்வர் பி.ராஜப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாதாரத் துறைத் தலைவர் ரெ.சந்திரகாந்தி வரவேற்றார். வணிகத் துறைத் தலைவர் எஸ்.தேவிபிரியா நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.
தன்விஜய் டெக்ஸ்மில்ஸ் நிர்வாக இயக்குநர் கே.விஜயசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அரங்குப் பார்வையிட்டார். தொடர்ந்து பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மேளாவில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இறுதியில் டி.பிரபா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஆர்.வஞ்சிகுமார், ஆர்.வெங்கடேசன், கே.அஸ்வினி ஆகியோர் செய்திருந்தனர்.