தொழில் நிறுவனத்தில் ஜூலை 1 ஆம் தேதி ரூ . 13 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிய மூன்று பேரை திங்கள்கிழமை சூலூர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் ,மயிலம்பட்டியில் தங்கதுரைக்குச் சொந்தமாக எஞ்சினியரிங் தொழில் நிறுவனம் உள்ளது. இங்கு சமையல் வேலை செய்ய உபயோகிக்கும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் செய்யப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் இரவு காவலர் இல்லை. இநிலையில், மர்ம நபர்கள் நிறுவனத்தின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமினிய சமையல் பொருள்கள், அங்கிருந்த உபகரணங்களை சாக்குகளில் கட்டி ஒரு வேன்மூலமாக திருடிச்சென்றனர். இது தொழில் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் குறித்து சூலூர் போலீஸார் குற்றவாளிகளை தேடிவந்தனர். சிந்தாமணிப்புதூர் அருகே சூலூர் காவல் ஆய்வாளர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அந்த வாகனத்தில் வந்தவர்கள் மைலம்பட்டி தொழில் நிறுவனத்தில் திருடியதும், பொருள்களை மறைவிடத்தில் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பொருள்களை மீட்ட போலீஸார் மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
கோவையை அடுத்த ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த குப்புசாமி மகன் பாபுகிருஷ்ணன் (எ) பாபு (25), போத்தனூரைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜலிங்கம் (37), சுந்தராபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் சிவசங்கர்(37) ஆகும்,
இவர்களை சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சூலூர் போலீஸார் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.