கோவை அரசு கலைக் கல்லூரியின் கணிதவியல் துறை சார்பில் கணித மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ்.நளினி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் பி.பொன்னுசாமி வரவேற்றார். ஆங்கிலத் துறை முன்னாள் தலைவர் சூரிய நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் அ.முரளிதரன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட நீதிபதி ஏ.முஹமது ஜியாபுதீன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் என்னுடன் பணியாற்றும் 4 நீதிபதிகள் அரசு கலைக் கல்லூரியில் படித்தவர்கள்தான். அரசுக் கல்லூரியில் படித்தவர்கள்தான் நல்ல நட்புடன் பழகுவார்கள். வாழ்க்கையில் பயம்தான் நமது பலவீனம். துணிவோடு எதிர் கொண்டால் எதையும் வெல்லலாம்.
வாழுகின்ற காலத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மற்றவர்களைப் பார்த்து போட்டி போடக் கூடாது. நாம் நமக்குள் சிறந்தவனாக விளங்க வேண்டும். நேற்றை விட இன்று நாம் அதிகம் கற்றுக் கொண்டுள்ளோம் என்ற எண்ணம் வரவேண்டும். நமக்குள் உள்ள கெட்ட விஷயங்களை நீக்கி நல்லவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி யார் செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறத் தொடங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கணிதம் என்பது மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. நாமே பயிற்சி செய்தால்தான் வரும். கல்வி நமக்கு வாழ்நாள் முழுவதற்கும் பல்வேறு சூழ்நிலைகளை எதிர் கொள்வதற்கான திறன்களை வழங்கி
வருகிறது என்றார். கணித மன்றச் செயலர் மாணவர் எஸ். மணிவண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.