தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு ஊழல்தான் காரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும் அல்லது ஆளுநர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலில் தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். பின்னர் அவரே தனது கருத்தை திரும்பப் பெற்றார். இதுகுறித்து அவர்தான் விசாரிக்க வேண்டும்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கும்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டும் இழப்பு ஏற்படுவதற்கு காரணம் ஊழல்தான். ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 7 பேரை விடுவிப்பதில் தமிழக ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார் என தெரியவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றார்.