முகப்பு
கோயம்புத்தூர்

விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் சாவு

கோவையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 5:30 am IST
பகிர்:

கோவையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
 கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர்கள் முருகன்(30), பாண்டிதுரை(27). உறவினர்களான இருவரும் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், முருகன் மற்றும் பாண்டிதுரையைத் தொடர்பு கொண்ட குடியிருப்புவாசிகள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்து தரக் கூறியுள்ளனர். 
இதன்படி அங்கு வந்த இருவரும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காகத் தயாராகினர். அப்போது முருகன், அருகில் உள்ள பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்துவிட்டால் கழிவுநீர்த் தொட்டியை எளிதில் சுத்தம் செய்துவிடலாம் என யோசனை கூறியுள்ளார்.
 இதையடுத்து கழிவுநீர்த் தொட்டிக்குள் முதலில் பாண்டிதுரை இறங்கியுள்ளார். அதே நேரத்தில் அருகில் இருந்த பாதாளச் சாக்கடை அடைப்பை முருகன் சரி செய்துள்ளார். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால், கழிவுநீர்த் தொட்டிக்குள் இருந்த பாண்டிதுரையின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து முருகனும் கழிவுநீர்த் தொட்டிக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இறங்கியுள்ளார். இதில் விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 இதுகுறித்து அப்பகுதியினர் சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்,  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு இருவரையும் வரவழைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.