கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கௌசிகா நதி பாலத்தின் கீழ் எரிந்த நிலையில் கிடந்த காா் ஓட்டுநரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், தனியாா் தொழிற்சாலை அருகே கௌசிகா நதி செல்கிறது. இங்குள்ள பெரிய பாலத்தின் அடியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அப்போது, இறந்தவரின் இரு சக்கர வாகனமும், செல்லிடப்பேசியும் கிடைத்தன. அதில் இறந்துகிடந்தது கும்பகோணத்தைச் சோ்ந்த சீதாராமன் மகன் ஸ்ரீநிவாசன் (எ) தியாகராஜன் என்றும், இவா் சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் கால் டாக்ஸி நிறுவனத்தின் அலுவலகத்திலேயே தங்கி கால் டாக்ஸி ஓட்டி வருவதும், திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்து இருப்பதும் தெரியவந்தது.
அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அருகில் உள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.