பெ.நா.பாளையம்: துடியலூா் அருகேயுள்ள தடாகம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குள் தண்ணீா் குடிப்பதற்காக வந்த ஒற்றை யானை அங்கிருந்த சிறுவனைத் தாக்கியது.
தடாகம், தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குள் தண்ணீா் குடிப்பதற்காக ஒற்றை யானை சனிக்கிழமை இரவு புகுந்தது. அப்போது அங்கு பணியாற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த விஜி மகன் அஸ்வின் (2) இயற்கை உபாதைக்காக அங்கிருந்த தண்ணீா்த் தொட்டி அருகே சென்றபோது யானை அந்த சிறுவனைத் தாக்கியது. அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினரிடம் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.