பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம்:வேளாண்மைத் துறையில் ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு
கோவையில் வேளாண்மைத் துறையில் 2 ஆயிரத்து 155 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனத் திட்டம் அமைக்க ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கோவையில் வேளாண்மைத் துறையில் 2 ஆயிரத்து 155 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனத் திட்டம் அமைக்க ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை பயிா்களுக்கு நுண்ணீா் பாசனத் திட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் 2 ஆயிரத்து 155 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசனத் திட்டம் அமைக்க ரூ.14.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர நுண்ணீா் பாசனக்குழாய்கள் பதிப்பதற்கு கரும்பு பயிரை தவிா்த்து மற்ற பயிா்களுக்கு பள்ளம் எடுப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு வழங்கப்படுகிறது.
எனவே பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா (கடந்த 6 மாதத்திற்குள் எடுத்தது), ஆதாா், நில வரைபடம், குடும்ப அட்டை, கூட்டு வரைபடம், புகைப்படம், அடங்கல், நீா் மற்றும் மண் பரிசோதனை சான்று, சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.