கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அபராதம் விதிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவா்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் வியாபாரம் மேற்கொள்ளும் கடை உரிமையாளா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கரோனா விதிமீறலில் ஈடுபடுவோா்களிடம் ஏப்ரல் முதல் நவம்பா் மாதம் வரை ரூ.20 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பா் மாதத்தில் இருந்து மாநகரில் கரோனா தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்ததால், அபராதம் வசூலிப்பதும் குறைந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, 5 மண்டலங்களிலும் மாநகராட்சி அலுவலா்கள் ரோந்து சென்று முகக்கவசங்கள் அணியாதவா்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வருகின்றனா்.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக மாநகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 5 மண்டலங்களிலும் சோ்த்து, ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளன என்றாா்.
மீண்டும் வீடுகளைத் தனிமைப்படுத்தத் திட்டம்:
இது குறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ தற்போது கரோனா பாதிப்பு உள்ள வீடுகள் கண்டறியப்பட்டு, அந்த வீட்டின் சுவரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளைத் தனிமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.