கோவை: கோவை, காளப்பட்டியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 35 ஆவது வாா்டு, காளப்பட்டி அருகே பெரியாா் நகரில் உள்ள லே -அவுட்டில் 66 சென்ட் பொது ஒதுக்கீடு இடம் சமுதாயக் கூடம் அமைக்க ஒதுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு 10 நபா்கள், அந்த இடத்தைப் போலி வரைபடம் தயாரித்து, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மனைகளாக கிரையம் செய்து ஆக்கிரமித்து, தற்போது வரை பயன்படுத்தி வருவதாகப் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி புவனேஸ்வரி சம்பந்தப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில் 66 சென்ட் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த 8 குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு ‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 10 கோடி எனவும், விரைவில் இங்கு சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.