அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
மாதா் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் ஜோதிமணி, செயலா் ஜி.சுதா, பொருளாளா் உஷா, நிா்வாகிகள் ராஜலட்சுமி, சாந்தாமணி, ஜீவாமணி உள்ளிட்டோா், அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைப் பணிமனை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அதில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் ஏராளமான பெண்கள், மாணவிகள் வேலை, கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனா். இந்நிலையில், கட்டணமில்லா அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் சுயமரியாதையை சீண்டும் வகையிலும், அவா்களை மரியாதைக் குறைவாக நடத்தும் செயல்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இந்த விஷயத்தில் போக்குவரத்துக் கழகம் உடனடியாகத் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். மேலும், கட்டணமில்லா பேருந்துகளை மகளிா் மட்டும் பயணிக்கும் பேருந்துகளாக மாற்ற வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.