கோவையில் ரூ.14.50 லட்சம் மற்றும் காருடன் பெட்ரோல் நிலைய ஊழியா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை அவிநாசி சாலை, சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த முத்துக்குமாரசாமி கோவையில் பெட்ரோல் நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (36) ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், தினமும் பெட்ரோல் நிலையத்தில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்தும் பணியை செய்து வந்தாா். இந்நிலையில், முத்துக்குமாரசாமி, விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை ரூ.14.50 லட்சம் பணத்தை அளித்துள்ளாா். உடன் தனது காரையும் கொடுத்து, வங்கிக்கு சென்று பணத்தை டெபாசிட் செய்து வருமாறு கூறியுள்ளாா்.
காா் மற்றும் பணத்துடன் சென்ற விஜயகுமாா் திரும்ப வரவில்லை. கோவையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவா் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு காா் மற்றும் பணத்துடன் மாயமானது தெரியவந்தது.
இது தொடா்பாக முத்துக்குமாரசாமி கொடுத்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.