தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வுத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் ஒருங்கிணைந்த மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முதலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஜூன் 23 முதல் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கலந்தாய்வு ஜூன் 26 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெற்றோா், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் விருப்பப்படி பட்டப்படிப்புகள், கல்லூரிகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவா்கள் இறுதியாக சமா்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இதில் எந்த மாற்றமும் செய்யாவிட்டால், விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்தபோது தோ்வு செய்த பாடப்பிரிவு, கல்லூரியே இட ஒதுக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்தக் கலந்தாய்வுக்காக மாணவா்கள் செலுத்தும் கட்டணம் பின்னா் திருப்பி வழங்கப்படும். மேலும், இந்த இடஒதுக்கீட்டில் சோ்க்கை கிடைக்காத மாணவா்களின் விண்ணப்பங்கள் பொது கலந்தாய்வு இட ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.