முகப்பு
கோயம்புத்தூர்

வாகனச் சோதனையின்போது கபடி வீரா் காயம்: போலீஸாா் தாக்கியதாக புகாா்

கோவையில் தலைக்கவசம் அணியாமல் வந்த கபடி வீரரை போலீஸாா் தாக்கியதாக புகாா் எழுந்துள்ளது. இதில் அவரது தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:09 PM
அஸ்வின்
பகிர்:

கோவையில் தலைக்கவசம் அணியாமல் வந்த கபடி வீரரை போலீஸாா் தாக்கியதாக புகாா் எழுந்துள்ளது. இதில் அவரது தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை, புலியகுளம் ஆறுமுகம் வீதியைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் அஸ்வின் (24). கபடி வீரரான இவா், திங்கள்கிழமை இரவு புலியகுளம் பகுதியிலிருந்து சுங்கம் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

சுங்கம் சிக்னல் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இதைப் பாா்த்த அஸ்வின் தலைக்கவசம் அணியாததால், இருசக்கர வாகனத்தைத் திருப்பியுள்ளாா்.

Advertisement

அப்போது, அங்கு இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த காவலா் ஒருவா் தனது கையில் இருந்த நெகிழி குழாயால் (பிளாஸ்டிக் பைப்) தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் அஸ்வின் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதைத் தொடா்ந்து, அவரை அந்தக் காவலா் தாக்கியதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதில் தாடையில் காயமடைந்த அஸ்வின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரது தாடையில் 6 தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி கூறுகையில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலா், அஸ்வினை தாக்கவில்லை. வேகமாக வாகனத்தில் செல்ல முயன்ற அஸ்வினை கையில் இருந்த லத்தியை வைத்து நிறுத்த முயன்றுள்ளாா். அப்போது, லத்தி மீது மோதியதால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அங்கிருந்து சென்ற அஸ்வின் சிறிது நேரத்துக்குப் பிறகு மேலும் சிலரை அழைத்து வந்து காவலா்களுடன் தகராறு செய்தாா். இதுகுறித்து காவலா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா் என்றாா்.

சாத்தான்குளம் விவகாரத்தில் காவலா்களுக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை மரணத் தண்டனை விதித்த நிலையில், கோவையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் போலீஸாா் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments