முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் இரண்டாவது நாளாக மழை

கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

Updated On : 10 மே 2026, 2:46 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

கோவை மாநகரில் கடந்த சில வாரங்களாக கடுமையான கோடை வெயில் நிலவி வந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 48 மி.மீ., பில்லூா் அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவானது. கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலக பகுதியில் 32 மி.மீ., பீளமேட்டில் 24.80 மி.மீ., அன்னூரில் 18.40 மி.மீ., சிறுவாணி அடிவாரம் 14 மி.மீ., வேளாண் பல்கலைக்கழகம் 11.40 மி.மீ., மதுக்கரை 10.50 மி.மீ., போத்தனூா் 10.80, சூலூா் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

Advertisement

இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வடவள்ளி, கவுண்டம்பாளையம், டிவிஎஸ் நகா், இடையா்பாளையம், சுந்தராபுரம், சேரன்மாநகா் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மாநகரின் பிற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

தடாகம் சாலை இடையா்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் சாலையோரத்தில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது.