ஈரோடு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில இளைஞர் சங்கச் செயலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுசாமி தீர்மானங்களை விளக்கினார்.
கூட்டத்தில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி தலைமையில் நடைபெறும் பேரணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் ஏரி, குளங்களில் வியாபாரிகள் மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் என்ற போர்வையில் நடைபெறும் இத்திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காடையம்பட்டி ஏரியின் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலர் ஷேக் மொகைதீன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.சி.செங்கோட்டையன், மாவட்டத் துணைச் செயலர் பெ.ரா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.