வேலை அளிப்போரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திறமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி. சுப்பிரமணியன் பேசினார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்.வேலுமணி தலைமையில் நடைபெற்ற தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:
இன்றைய கல்விச் சூழலில் படித்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், வேலை பெறுவோரின் எண்ணிக்கை கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. தொழில் கல்வியை நாம் புரிந்து படிக்காததே முக்கியக் காரணம். இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் வேலை அளிப்பவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. மாணவர்கள் அதை உணர்ந்து கொண்டு தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நல வாரிய அலுவலர் சாமுவேல், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா ஆகியோர் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினர்.
இதில், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டனர்.