இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக் கலைத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் அங்கக வழி வேளாண்மையை (இயற்கை வேளாண்மை) ஊக்கப்படுத்த தோட்டக் கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் அங்ககச் சான்று பெறத் தேவையான அனைத்து செலவினங்களையும் தோட்டக் கலைத் துறை மூலம் மானியமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இயற்கை முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், நல்ல லாபம் ஈட்ட முடியும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெறலாம். எனவே, இயற்கை விவசாயிகள் தனி நபராகவோ, குழுவாகவோ அங்ககச் சான்று பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர இயற்கை முறையில் காய்கறிப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடிக்குத் தேவையான மானிய உதவியும், ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. அங்ககச் சான்று பெறும் விவசாயிகளுக்குத் தோட்டக் கலைத் துறை திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது இயற்கை முறையில் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளும், இயற்கை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளும் தோட்டக் கலைத் துறை மூலம் சாகுபடி மானியம் பெறவும், அங்ககச் சான்று பெறுவதற்கும் தங்களது பெயரை அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.